திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருக்குறுந்தாண்டகம்
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
திருக்குறுந்தாண்டகம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2032
நிதியினைப் பவளத் தூணை
    நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக்
    கண்டுமுன் அண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி
    வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட
    தொண்டனென் விடுகி லேனே.#
1
2033
காற்றினைப் புனலைத் தீயைக்
    கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய
    எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை
    அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம்
    கூறுநீ கூறு மாறே.
2
2034
பாயிரும் பரவை தன்னுள்
    பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங் கொண்ட
    அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ் சோலை சூழ்ந்து
    விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ் சோலை மேய
    மைந்தனை வணங்கி னேனே.
3
2035
கேட்கயா னுற்ற துண்டு
    கேழலா யுலகங் கொண்ட,
பூக்கெழு வண்ண னாரைப்
    போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால்
    மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி
    விழுங்கினேற் கினிய வாறே.
4
2036
இரும்பனன் றுண்ட நீர்போல்
    எம்பெருமா னுக்கு, என்றன்
அரும்பற லன்பு புக்கிட்
    டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை
    மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப்
    பருகினேற் கினிய வாறே.
5
2037
மூவரில் முதல்வ னாய
    ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய
    குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப்
    பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர்
    என்சொல்லிப் புகழ்வர் தாமே?
6
2038
இம்மையை மறுமை தன்னை
    எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந்த சோலை
    வியன்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத்
    திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன்
    தலைமிசை மன்னு வாரே.
7
2039
வானிடைப் புயலை மாலை
    வரையிடைப் பிரசம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றைத்
    திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி யந்தோ*
    மதிக்கிலர் கொள்க, தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்
    குறுதியே வேண்டி னாரே.
8
2040
உள்ளமோ ஒன்றில் நில்லாது
    ஓசையி னெறிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக்
    குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர்* தேவர்க் கெல்லாம்
    தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால்
    எழுமையும் துணையி லோமே.
9
2041
சித்தமும் செவ்வை நில்லா
    தென்செய்கேன் தீவி னையேன்,
பத்திமைக் கன்பு டையேன்
    ஆவதே பணியா யெந்தாய்,
முத்தொளி மரத கம்மே*
    முழங்கொளி முகில்வண் ணா,என்
அத்த*நின் னடிமை யல்லால்
    யாதுமொன் றறிகி லேனே.
10
2042
தொண்டெல்லாம் பரவி நின்னைத்
    தொழுதடி பணியு மாறு
கண்டு,தான் கவலை தீர்ப்பான்
    ஆவதே பணியா யெந்தாய்,
அண்டமா யெண்டி சைக்கும்
    ஆதியாய் நீதி யான,
பண்டமாம் பரம சோதி*
    நின்னையே பரவு வேனே.
11
2043
ஆவியை யரங்க மாலை
    அழுக்குடம் பெச்சில் வாயால்,
தூய்மையில் தொண்ட னேன்நான்
    சொல்லினேன் தொல்லை நாமம்,
பாவியேன் பிழைத்த வாறென்
    றஞ்சினேற் கஞ்ச லென்று,
காவிபோல் வண்ணர் வந்தென்
    கண்ணுளே தோன்றி னாரே.
12
2044
இரும்பனன் றுண்ட நீரும்
    போதரும் கொள்க, என்றன்
அரும்பிணி பாவ மெல்லாம்
    அகன்றன என்னை விட்டு,
சுரும்பமர் சோலை சூழ்ந்த
    அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன்
    கண்ணினை களிக்கு மாறே.
13
2045
காவியை வென்ற கண்ணார்
    கலவியே கருதி, நாளும்
பாவியே னாக வெண்ணி
    அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்,
தூவிசேர் அன்னம் மன்னும்
    சூழ்புனல் குடந்தை யானை,
பாவியேன் பாவி யாது
    பாவியே னாயி னேனே*
14
2046
(*)முன்பொலா இராவ ணன்றன்
    முதுமதி ளிலங்கை வேவித்து,
அன்பினா லனுமன் வந்தாங்
    கடியிணை பணிய நின்றார்க்கு,
என்பெலா முருகி யுக்கிட்
    டென்னுடை நெஞ்ச மென்னும்,
அன்பினால் ஞான நீர்கொண்
    டாட்டுவ னடிய னேனே.

(*) இப்பாசுரம் திருமஞ்சன காலத்தில் சேவிக்கப்படுகிறது.
15
2047
(*)மாயமான் மாயச் செற்று
    மருதிற நடந்து, வையம்
தாயமா பரவை பொங்கத்
    தடவரை திரித்து, வானோர்க்
கீயுமால் எம்பி ரானார்க்
    கென்னுடைச் சொற்க ளென்னும்,
தூயமா மாலை கொண்டு
    சூட்டுவன் தொண்ட னேனே.

(*) இப்பாசுரம் திருமஞ்சன காலத்தில் சேவிக்கப்படுகிறது.
16
2048
பேசினார் பிறவி நீத்தார்
    பேருளான் பெருமை பேசி,
ஏசினார் உய்ந்து போனார்
    என்பதிவ் வுலகின் வண்ணம்,
பேசினேன் ஏச மாட்டேன்
    பேதையேன் பிறவி நீத்தற்கு,
ஆசையோ பெரிது கொள்க
    அலைகடல் வண்ணர் பாலே.
17
2049
இளப்பினை யியக்கம் நீக்கி
    யிருந்துமுன் னிமையைக் கட்டி,
அளப்பிலைம் புலன டக்கி
    அன்பவர் கண்ணே வைத்து,
துளக்கமில் சிந்தை செய்து
    தோன்றலும் சுடுர்விட்டு, ஆங்கே
விளக்கினை விதியில் காண்பார்
    மெய்ம்மையே காண்கிற் பாரே.
18
2050
பிண்டியார் மண்டை ஏந்திப்
    பிறர்மனை திரிதந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த
    ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
    கச்சிபேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால்
    மற்றையார்க் குய்ய லாமே?#
19
2051
வானவர் தங்கள் கோனும்
    மலர்மிசை அயனும், நாளும்
தேமலர் தூவி ஏத்தும்
    சேவடிச் செங்கண் மாலை,
மானவேல் கலியன் சொன்ன
    வண்டமிழ் மாலை நாலைந்தும்,
ஊனம தின்றி வல்லார்
    ஒளிவிசும் பாள்வர் தாமே.#
20
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com